சர்வதேசத்தை நோக்கி நீதி கோரி மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உணவுத்தவிர்ப்பு போராட்டம் 6வது நாளாக இன்று முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் நீதிமன்ற தடையுத்தரவுடன் சென்ற பொலிஸாரால் குழப்பம் ஏற்ப்பட்டுள்ளது.
தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை அரச படைகளால் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை குற்றம் தொடர்பான விடயத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் பாரப்படுத்துமாறு வலியுறுத்தி வடகிழக்கு தழுவியதாக முன்னெடுக்கப்பட்டு வரும் சுழற்சிமுறையிலான உணவுத் தவிர்ப்ப போராட்டம் மட்டக்களப்பில் இன்று 6ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய முன்பாக நடைபெற்று வரும் சர்வதேச நீதி கோரிய தொடர் உணவு தவிர்ப்புப் போராட்டத்தின் 6-வது நாளான இன்று சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளும் ஆதரவாக இணைந்து போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
இதன் போது அங்கு சென்ற பொலிசார் நீதிமன்ற தடை உத்தரவுகளை வாசித்தனர். சிலருக்கு எதிராக தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த நிலையில் அங்கு தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ள நபர்கள் யாரும் இல்லாதிருந்தனர்.
இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லுமாறு கடுமையான தொனியில் தெரிவித்து அங்கிருந்து சென்றதாக போராட்டத்தில் ஈடுபட்டு வருவோர் தெரிவித்தனர்.
இதேவேளை நீதிமன்ற தடையத்தரவை காரணம்காட்டிசுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை தடுத்து குழப்பும் வகையில் கடந்த சனிக்கிழமை முதல் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு